கல்லூரி
விடுமுறை நாட்கள் தான். விடுமுறையிலும் ஏதாவது செய்தால் தானே ‘நீயா நானா’ புகழ் கோபிநாத்
கூறுவது போல பின்னாளில் ஊரைத் தாண்டி ஊரப்பாக்கம் அருகே 3BHK வீடு வாங்கமுடியும்? அதனால்
நானும் சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள ஒரு கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்வதற்கு சென்றேன்.
வழக்கம்போல பம்பரம் போல வேலை செய்யும் பொறியாளர்களும், மற்ற தொழிலாளர்களும் கம்பெனியை
சுறுசுறுவென சுற்றி வந்துகொண்டிருந்தனர். நான் வழக்கம்போல எனது ப்ராஜெக்ட் வேலைகளை
செய்யத் தொடங்கினேன். வேலை செய்பவர்களை வேலை செய்கிறார்களா, எவ்வளவு நேரம் செய்கிறார்கள்,
எவ்வளவு நேரம் ஓய்வெடுக்கிறார்கள், எப்படி வேலை செய்கிறார்கள் என்று நோட்டமிட்டு அதனை
எப்படி இன்னும் சிறப்பாக செய்யலாம் என்று அறிவுறுத்துவது தான் எனது ப்ராஜெக்ட். பணிகள்
மதியம் வரை வழக்கம்போல தொடர்ந்தன.
காலையில்
வேலை ஆரம்பத்தில், தொழிளாலர்களிடம் இருக்கும் அந்த சுறுசுறுப்பு கடைசி வரை நீடிப்பதே
இல்லை. இவ்வளவுக்கும் அந்த வேலை ஒன்றும் கடினமான வேலையும் கிடையாது. என்ன காரணம் என்று
எண்ணிக்கொண்டே எனது கைக்கடிகாரத்தில் நேரத்தை நோட்டமிட்டபடி நடந்தேன். சிறிது தொலைவில்
ஒரு ஐம்பது வயது பெரியவர் ஒருவர் அங்கே இருந்த குப்பைகளை அள்ளி குப்பைத் தொட்டியில்
போட்டபடி நடந்து கொண்டிருந்தார். இவர் காலையில் வந்தது முதல் இதே வேகத்துடன் வேலை செய்துகொண்டிருக்கிறாரே
என்று வியந்தபடி அவர் அருகே சென்றேன். “ஐயா, நீங்க காலைல இருந்து ஓய்வே இல்லாம நடந்துகிட்டே
இன்னும் சுறுசுறுப்பா வேல செய்யுறீங்க… ஆனா இங்க உள்ளவங்க எல்லாம் நின்னுக்கிட்டே செய்யுற
வேலைக்குக் கூட சோர்வாகிட்டாங்களே?” என்று கேட்டேன். பெரியவர் தான் செய்து கொண்டிருக்கும்
வேலையை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டே கூறினார்: “தம்பி... வேலை செய்யுறவங்கள இப்புடி
ஒன்னு சேர்த்து போடக்கூடாது பா… அதுல ஒருத்தருக்கு கொஞ்சம் களைப்பாகுற மாதிரி தோணுனாக்கூட
பக்கத்துல இருக்குறவங்க கிட்ட பேச ஆரம்பிச்சுருவான்! பக்கத்துல இருக்கவனுக்கு உண்மையாவே
களைப்பா இல்லைனாலும் அவன் சொன்னது களைப்பாக்கி விட்டுரும். தனியா இருந்தா அதெல்லாம்
தோணுனாலும் செய்யுற வேலையில மறந்துரும்… இது தெரியாம ஒரே இடத்துல கும்பலா போட்ருக்கானுங்க!”
என்றபடி தனது குப்பைக்கூடையை இழுத்துக்கொண்டே சென்றார். சற்று திரும்பிப் பார்த்தேன்
மேலாளர் அறையில் அவரது தலைக்குப் பின்னால் அலமாரியில் “Strategic People
Management” புத்தகம்!
0 comments:
Post a Comment