23.6.14

மோடி அரசின் முதல் பட்ஜெட் - மக்களின் எதிர்பார்ப்புகள்

       பிரதமராக பதவியேற்றப் பிறகு நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடக்கும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
   
        மக்களின் ஏகோபத்திய ஆதரவுடன், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொறுப்பேற்றிருக்கும் மோடி அரசிடம் பொதுமக்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள்? ஒரு சிறிய அலசல்.
     பதவியேற்ற சில தினங்களிலேயே முந்தைய அரசால் காலியாக்கப்பட்ட அரசு கஜானாவை நிரப்புவதற்காக சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதாக வழக்கம்போல புதிய பிரதமரும் சொன்னது யாருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது. சொன்னது போல ரயில் கட்டண உயர்வு! மக்களிடையே சிறிது சலனத்தை அது ஏற்படுத்தினாலும், இவர் ஏதோ மாற்றம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது என்பதே உண்மை. 
       குறைந்தபட்ச வருமான வரி விலக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுவே சம்பாதிக்கும் இடைநிலை பொதுமக்களின் பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. அரசிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்ற போதும் இது மக்களிடையே மறைமுகமாக மோடி அரசின் செல்வாக்கை அதிகப்படுத்தும் என்பது அவர்களும் அறிந்த ஒரு உண்மை.
    மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பது, அவற்றுடனான நல்லுறவை மேம்படுத்துவது ஆகியவற்றை தனது 3 முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக வைத்துள்ள பிரதமர் கண்டிப்பாக அது தொடர்பான சில திட்டங்களை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு மட்டுமின்றி அரசியல் தலைவர்களிடையிலும் நிலவுகிறது.
      இணையதளங்கள் தான் இக்காலத்தில் விரைவில் சேவைகள் கிடைக்க வழி செய்யும் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்த தலைவர் மோடி. அவர் பிரதமராவதற்கு மிகப் பெரிய அளவில் உதவியது இந்த இணையம் தானே. இணையதளங்கள் மூலம் அனைத்து சேவைகளும் உடனடியாக கிடைக்க வழி செய்யப் போவதாக பிரதமர் கூறியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
         மறைமுக வரிகளில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அது எந்த அளவில் இருக்கும் என்பதை அறியவும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இது எல்லாம் போக மோடி அவர்களின் கனவு திட்டங்களான கல்வி, சுகாதாரம் மற்றும் சுத்தமான பொதுக்கழிவறை திட்டங்களும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. 
    மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நமக்கு 10ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் பதிலளிக்கும் என்று நம்புவோம்!

0 comments:

Post a Comment