30.6.14

என்னாமா ஏமாத்துறாய்ங்க!

         அடடே "ஜன்னலோர சீட்டு!" என்று எண்ணியவாறு பேருந்தின் கடைசி இருக்கையில் ஓரமாக சென்று அமர்ந்தேன். தேநீர் அருந்தியவாறு வெளியே உலாவிய நடத்துநரிடம் மெதுவாகக் கேட்டேன்: "வண்டி எப்போ எடுப்பீங்க?" என்று. எதோ அவரது இரண்டு வாசல் மாடிவீட்டை இலவசமாக எழுதிக்கேட்டது போல கோபத்தோடு, "எடுப்போம்யா.. சீக்கிரம் எடுப்போம்" என்றார். திட்டு வாங்கியதை யாராவது பார்த்தார்களா என்று சுற்றிமுற்றி பார்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.
        பேருந்து கிளம்ப இன்னும் 10 நிமிடம் ஆகும் போல என்று மனதில் எண்ணியவாறு பேருந்தில் எழுதியிருந்த திருக்குறளைப் படித்துக் கொண்டிருந்தேன்: 
          "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
            கள்ளத்தால் கள்வேம் எனல்."
              நேரம் போகாமல் திருக்குறளை மனப்பாடம் செய்துகொண்டே அமர்ந்திருந்தேன். திடீரென பேருந்தின் முன்வாசல் வழியாக சடசடவென பேருந்திற்குள் இருவர் ஏறினர். பின்வாசல் வழியே ஒருவர் ஏறி, மெதுவாக எனக்கு முன்பு இருந்த இருக்கையில் அமர்ந்தார். முன்னால் நின்றுகொண்டிருந்த இருவரும் தனது பையில் வைத்திருந்த ஒரு துணியை வெளியே எடுத்து நீட்டி ஏதோ பேச ஆரம்பித்தனர். வெட்டியாகத் தானே இருக்கிறோம் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம் என நானும் என்போல பேருந்தில் வெட்டியாக இருந்தோரும் வேடிக்கை பார்த்தோம்.
                "இதோ பாருங்கள் மக்களே.. பாம்பே  சஃபாரி துணி! 1000 ரூபாய்க்கு பெறும் இந்த துணியை உங்களுக்காக ஏலம் விடப்போறேன். ஆரம்ப மதிப்பு 100 ரூபாய் தான்!" என்கிறான். சட்டென எனக்கு முன்சீட்டில் மெதுவாக அமர்ந்த நபர்: "300 ரூபாய்" என்கிறான். "நல்லா கூட்டிக் கேளுங்க ஐயா, மதிப்பு 1000 ரூபா" என்றபடி வேற ஏலம் கேளுங்க என்றான். வேறு குரலே கேட்கவில்லை அவனே "ஆம் 500 ரூபாய் கேட்டு விட்டார்!"  என்கிறான். பின் எனக்கு முந்தைய சீட்டில் இருக்கும் நபர் ஒரு கணிசமான தொகையைக் கூறி ஏலத்தை முடிக்கிறார். இவர் ஏலத்தை முடித்ததும் இவருக்கு பேனா சீப்பு போன்ற பல பரிசுப்பொருட்களையும் அவர் கொண்டு வந்து கொடுக்கிறார். பேருந்தில் இருந்த அனைவரும் பின்னால் திரும்பி அந்த அதிர்ஷ்டசாலியை பார்க்கின்றனர். இந்த காட்சிகள் பிதாமகன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா மக்களிடம் ஏமாற்றுவது போலவே இருந்தது! இதை யாரடா நம்பப்போகிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது!
                     மறுபடியும் இன்னொரு துணியை விரித்தபடி, "பெங்களுரு சாஃப்ட் காட்டன் சட்டைத்துணி! மதிப்பு - 2000 ரூபாய்" என்றான். படித்து முடித்து வேலைக்கு செல்லும் வயதில் ஒரு இளைஞன்! தனது தந்தையுடன் ஊருக்கு சென்றுகொண்டிருக்கிறான். சட்டென எழும்பி "1000" என்றான்! நான் அதிர்ந்து போனேன். அடேய் ஆயிரம் திரைப்படத்தில் காண்பித்தாயிற்று! இன்னுமா நீங்கள் திருந்தவில்லை என்று எண்ணிக்கொண்டேன்! பின்னால் இருக்கும் பாம்பே சஃபாரி வெற்றியாளர் வேகமாக "2000" என்றான்! படித்த இளைஞன் சளைத்தவனா? விடவில்லையே! "2500-ஆம்!" பின்னிருக்கை "3000" என ஏற்றிவிட நம்மாள், "3250"-க்கு முடிக்கிறான் ஏலத்தை! ஏதோ சாதித்தது போல ஒரு வெற்றிக்களிப்பு இளைஞனின் முகத்தில்! ப்ளாஸ்டிக் சீப்பு, பேனா முதலிய பரிசுகளைப் பெற்றுக்கொண்டு துணியைக் கேட்கிறான். பேருந்து புறப்படும் வரை, "கொஞ்சம் பொறுங்கள் விற்பனை முடிந்ததும் தருகிறேன்" என்றான்.
                       பேருந்து புறப்படும் நேரமும் வந்தது. என்னைப் பார்த்து "உர்ர்ர்ர்"-என உறுமிய நடத்துநரும், பேருந்தின் ஓட்டுநரும் பேருந்திற்குள் நடந்துகொண்டிருக்கும் எதையுமே கண்டுக்கொள்ளாதது போல மிகவும் சாந்தமாக ஏறினர். பேருந்து கிளம்பவும், தனது பையில் இருந்த துணியை
இளைஞனிடம் நீட்டி, "இந்தா! காச எடு!" என்றான். துணியைத் தொட்டுப் பார்த்த வாலிபன், "என்ன இது சட்டைத்துணி இப்படி இருக்கு? இது 200 ரூபாய் கூடப் பெறாதே" என்றான்! ஏலக்காரன், - இப்போது மிகவும் கடுமையாக!- "இந்தா நா போட்ருக்க சட்டைய வேணா கழற்றித் தாரேன்! போட்டுக்கிறியா? பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க இப்டி பிச்சக்காரன் மாதிரி பேசுற? ஏலம் கேட்டில்ல? காச எடு!" என்றான்! படித்த இளைஞன்! இதற்கு மேல் பேசினால் எங்கு தான் இன்னும் அவமானப் பட்டுவிடுவோமோ என்று பயந்து காசை நீட்டி அந்த துணியை பெற்றுக்கொண்டான்!
              ஏலக்காரன் இறங்கி அடுத்த பேருந்தில் ஏறினான்! கடைசி இருக்கையை கவனித்தேன் - அதே பாம்பே சஃபாரி துணி வெற்றியாளர்! பேருந்து கிளம்பியது! அருகில் இருந்த பெரியவர் தன் கைப்பேசியை தட்டி கண்ணதாசனை எழுப்பினார் :
 "வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்....!"

0 comments:

Post a Comment