1.6.14

என்ன வளம் இல்லை?


தமிழ் மண்ணிலே பிறந்து, தமிழ்மொழியிலே வளர்ந்து, தமிழையே தினம் தொட்டு, தொடங்கி, தொழுது, தமிழனென கம்பீரமாக நடைபோட்ட காலமும், இனிவரும் நாளிலே மறைந்து ஓடிடும் போலும். தமிழிலே படித்தால் ஏளனம், தமிழிலே பேசினால் வெட்கம், தன்னைத் தமிழனெனக் காட்டிக்கொண்டால் அவமானம்! இது போதாதென தமிழினத்திற்க்கே சொந்தமில்லாத பொறாமை, துரோகம், சுயநலம்! தன்னை மட்டுமே எண்ணி தனக்காகவே வாழும் கூட்டம்! தாய்த்திருநாட்டில் காணாததை வேற்றுநாட்டில் கண்டுவிட்டார் போலும்.      “நாட்டுக்கு நீ என்ன செய்தாய்” என்ற கேள்வியை அன்று ஜப்பானியரும், சீனர்களும் தன்னைத்தானேக் கேட்டுக் கொண்டதனால் தான் இன்று அவர்கள் இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு முன்னேறிவிட்டனர். “நல்ல சம்பளத்துடன் வேலை இந்தியாவில் இல்லையாம்” – காரணமெனச் சொல்கிறார்கள் ஒருசில படித்த சாமானியர்கள்! அவ்வளவு பேசுபவர்கள் அந்த வேலைகள் இந்தியாவில் ஏன் இல்லை என்று ஒருகணமாவது எண்ணிப் பார்த்ததுண்டா? ஒன்றிரண்டு காரணமல்ல, ஓராயிரம் உண்டு. 


“தன் வேலை – தன் வாழ்க்கை – தன் குடும்பம்” என்ற தனிதத்துவம்!

“எவனாவது ஒருவன் முன்னே செல்லட்டும் – பின்னால் தொடர்ந்து கொள்ளலாம்” என்ற பெருந்தன்மை!

“எப்படியோ இன்று ஒருநாள் கழிந்தது” என்ற உயரிய கொள்கை!
இவை அனைத்தும் மேலே வாதாடும் அதே சாமானியரின் கொள்கைகள் தான்!

    இங்கிலாந்தின் 30 சதவிகித மருத்துவர்கள் இந்தியர்கள் தானாம். போதாதென அமெரிக்காவின் நாசாவில் 35 சதவிகிதம் இந்திய பூர்வீகவாதிகளாம். இப்படி இந்தியாவை அனாதையாக்கிவிட்டு, வேற்றுநாடுகளைப் பூத்துக் குலுங்கச் செய்யச் செல்லும் மேல்மட்ட அன்பர்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் அதைவிட மோசம்!

   ஆறு பேர் கொண்ட ஏழ்மையான குடும்பம்! தாய், தந்தை, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி – இவர்களின் வாழ்க்கைச்சுமையை தனிமனிதனாகத் தன் தோளில் சுமக்கின்ற இந்தியாவின் ஒரு சராசரி குடிமகன்! இந்தியாவில் வேலை பார்த்தால் சரிவர சம்பாதிக்க முடியவில்லை என்று வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் ஒரு கீழ்மட்டமான கம்பெனியில் தன் பெயரைப் பதிவு செய்கிறான். மகன் வெளிநாடு செல்கிறான் என்ற சந்தோஷம், அண்ணன் சம்பாதித்து பணம் அனுப்புவான் என்ற நம்பிக்கை, என் குடும்பத்தின் தரம் உயர்ந்து விடும் என்ற கனவு…. இவை அனைத்தையும் தன்னோடு விமானத்தில் ஏற்றிக் கொண்டு சென்று, வெளிநாட்டுக் கல்லறைகளில் கொண்டு போய் அடைக்கிற அவலமும் நடக்கத்தான் செய்கிறது. நாம் எல்லோரும் நினைப்பது போல் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் அங்கே வசதி பெற வாழ்வதில்லை.


    அரபு நாடு ஒன்றில் வேலை பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் அங்குள்ள கொத்தடிமைகள் பற்றிச் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் என் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. வேலை விஷயமாக இவர் நாட்டின் ஒரு பகுதிக்கு சென்றபோது அங்கு இவரைத் தமிழனென அடையாளம் கண்டு கொண்ட ஒரு நபர் ஓடி வந்து தன்னை ஊருக்கு கூட்டிச் செல்லுமாறு இவரது கால்களை பிடித்துக் கொண்டு கதறி இருக்கிறார். விசாரித்தபோது, அவர் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, ஏதோ ஒரு பெயர் தெரியாத வேலைவாய்ப்பு ஏஜென்சி மூலமாக வெளிநாடு வந்ததாகவும், அவர்கள் இங்கே கொத்தடிமையாக சேர்த்துவிட்டதையும் கூறியிருக்கிறார். முதலாளியை எதிர்த்துக் கேள்வி கேட்டதால் பாஸ்போர்ட்டையும் பறித்து ஒட்டகங்களை மேய்க்க சொல்லி பெயர் தெரியாத ஊரிலே விட்டு சென்று விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    இது ஒருவரின் கதையல்ல. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு லட்சகணக்கில் ஏற்றுமதி செய்யப்படும் பல மக்கள் இப்படித்தான் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் பலர் இரகசியமான முறையில் எந்த பதிவிலும் இல்லாமல் இறந்து போவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஏழைகள் என்ன கேட்கவா போகிறார்கள்?
    இதற்கெல்லாம் தீர்வு? தீர்க்கமான சட்ட திட்டங்கள் இல்லை, அரசியல் முறை இல்லை என்று மற்றோரை சொல்வதைவிட்டு விட்டு, தூங்கிக் கொண்டிருக்கும் நம் சுயபுத்தியைக் கொஞ்சம் தட்டி எழுப்பித்தான் பாருங்களேன்!
    வெறும் எண்ணெய் வளமும், பணபலமும் கொண்ட நாடுகள் எல்லாம், தெளிவான மனித வளமும், தூய்மையான அறிவுபலமும் கொண்ட ஆற்றல்மிகுந்த இந்தியாவைக் கண்டு, பின்னங்கால் பிடரியிலடிக்க தலைதெறித்து ஓடுவதை, இந்த தலைமுறையே நிமிர்ந்து நின்று, “தமிழனென்ற” கர்வத்துடன் காணலாம்.


             வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!

0 comments:

Post a Comment