30.6.14

வலைப்பூக்களின் தந்திரம்

       தங்களது வலைப்பூக்களுக்கும் வலைத்தளங்களுக்கும் வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக சில எழுத்தாளர்கள் சில விஷம தகவல்களையும் இல்லாத வதந்திகளையும் பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறாக இணையதளங்களில் பரப்பப்படும் சில விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நம் கொஞ்சுதமிழ் வலைப்பூ சிறிது கவனம் செலுத்துகிறது. அவற்றில் முதன்மையாக இன்று தானியங்கி வங்கி இயந்திரம் பற்றிய ஒரு வதந்தியை விவரிக்கிறோம்.


      ATM என்றழைக்கப்படும் தானியங்கி வங்கி இயந்திரங்களில் பணம் எடுக்கசெல்லும்போது கொள்ளையர்கள் பணம் எடுப்பவரை மிரட்டி எல்லா பணத்தையும் எடுக்க செய்து கொள்ளை அடிப்பது இன்றுவரை இயல்பாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க ஒரு வழி இருப்பதாக சில வருடங்களுக்கு முன்னர் ஒரு வதந்தி ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரவியது. அதன்படி கொள்ளையர்கள் யாராவது உங்களை மிரட்டினால் தங்களது 4 இலக்க கடவுச்சொல்லை பின்னிருந்து முன்னாக மாற்றி பதிவு செய்தால் இயந்திரம் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுப்பதாகவும்,இதனால் கொள்ளையரை மிக எளிதாக பிடித்துவிடலாம் என்றும் அந்த வதந்தி தெரிவித்தது.

            சற்றே எண்ணிப் பார்த்தேன். எனது கனரா வங்கியின் கடவுச்சொல் 7447 என்பதாகும். இதனை தலைகீழாக எழுதினாலும் அதே 7447 தானே. இந்த வதந்தி கூறுவது உண்மையெனின் ஒவ்வொரு நேரமும் நான் பணம் எடுக்கும்போது என்னைச் சுற்றி பாதுகாப்பிற்கு காவல்துறையும் வந்திருக்கும்.

      இது என்ன என்று விசாரிப்பதற்காக வங்கி சார்ந்த ஒரு அதிகாரியிடம் கேட்டேன். அவர் கூறியதாவது : அந்த வதந்தி கூறுவது போன்ற ஒரு வசதி இந்தியாவில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவ்வாறு அமல்படுத்தப்பட்டால் மாலைமாற்று எண்களை (Palindrome Numbers இலக்கங்களை திருப்பி எழுதினாலும் அதே எண் தான் வரும்) வங்கிகள் கடவுச்சொற்களாகத் தராது என்றும் கூறினார்.

      வலைத்தளங்களுக்கு ஓர் வேண்டுகோள்: மக்கள் மத்தியில் புரளிகளை கிளப்பி பக்கத்திற்கு வாசகர்களை சேர்ப்பது அறிவீனம் இல்லையா? புரிந்து செயல்படுங்கள். 

0 comments:

Post a Comment